Search This Blog

Showing posts with label ஆ.ராசா. Show all posts
Showing posts with label ஆ.ராசா. Show all posts

Wednesday, 19 January 2011

ஜெயலலிதாவைக் கைது செய்யலாமா?

    
அ.தி.மு.க. தலைமை நிலையத்தில் ஒரு விழா. அதிலே கலந்து கொண்ட ஜெயலலிதாவிடம் பத்திரிகையாளர்கள், 2ஜி அலைக்கற்றை விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு சி.பி.ஐ. நோட்டீஸ் அனுப்பியுள்ளதே என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு பதிலளித்த ஜெயலலிதா ""ஆ.ராசாவை சி.பி.ஐ. உடனடியாகக் கைது செய்ய வேண்டும்"" என்று குறிப்பிட்டிருக்கிறார். நோட்டீஸ் அனுப்பினாலே போதும் கைது செய்யத்தான் வேண்டும் என்றால் முதலில் கைது செய்யப்படவேண்டியவர் ஜெயலலிதா வாகத்தான் இருக்கமுடியும். 

*** ராசா மீது எந்த வழக்கும் இல்லை. எந்த எப்.ஐ.ஆரும் போடப்பட்டதில்லை. எந்தவித குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட வில்லை. எனினும், சி.பி.ஐ. அவருக்கு சம்மன் அனுப்பிவிட்டது என்ற ஒரு காரணத்துக்காகவே அவரை கைது செய்யவேண்டும் என்கிறார் ஜெயலலிதா. இந்த விசயத்தில் ஜெயலலிதாவின் யோக்கியதை என்ன? அவர் மீது சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கே நடந்து வருகிறது. 10 ஆண்டு களுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த வழக்கு அன்னிய செலாவணி மோசடி என்ற குற்றப் பிரிவின்கீழ் தொடரப்பட்ட வழக்கு ஆகும். சி.பி.ஐ. சம்மன் அனுப்பிவிட்டது - என்பதற்காகவே ராசாவை கைது செய்ய வேண்டும் என்றால், - ஜெயலலிதாவுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. அந்த சம்மன் தொடர்பாக ஜெயலலிதா சி.பி.ஐ. அலுவலகத்தில் நேரடியாக ஆஜராகி விளக்கமும் அளித்தார். - அந்த வழக்கில் அவர் மீது குற்றப் பத்திரிகை பதிவு செய்து 10 ஆண்டுகளாக அது நடந்து வருகிறது. 

*** 1991-ல் ஜெயலலிதா முதலமைச்சர் ஆனார். அந்த ஆண்டு எந்த ஆண்டிலும் இல்லாத வகையில் அவரது பிறந்த தினத்தை அ.தி.மு.க. வினர் கொண்டாடினார்கள். பிறந்த தினத்தை யொட்டி அவருக்கு ஏராளமான பரிசுகள் வந்து குவிந்தன. வெளிநாட்டிலிருந்து அவருக்கு பிறந்த தின பரிசாக 3,00,000 அமெரிக்க டாலர்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அந்தத் தொகையை வாங்கி ஜெயலலிதா அப்படியே தனது வங்கிக் கணக்கில் போட்டுக் கொண்டார். இந்தப் பணம் எங்கிருந்து யாரிடமிருந்து அனுப்பப்பட்டது என்ற கேள்வி எழுந்தபோது அவர் எனக்குத் தெரியாது என்று மறுத்தார். அன்றைய ரூபாய் மதிப்பில் அந்த பணம் 77 லட்சத்து 52 ஆயிரத்து 501 ரூபாய் ஆகும். ""எனக்குக் கிடைத்த இந்தத் தொகைகள் அனுப்பப்பட்ட கவர்களில் இந்தத் தொகை யாரிடமிருந்து வந்தன என்பதற்கான முகவரி எதுவும் இல்லை. நான் இதனை எனது ஆடிட்டரிடம் கொடுத்து பரிசீலிக்க சொன்னேன். அவர் இதை பிறந்தநாள் பரிசாகத்தான் அனுப்பியிருக்கிறார்கள். ஆகவே நீங்கள் இந்தத் தொகையை உங்கள் கணக்கிலேயே வரவு வைத்துக் கொள்ளலாம்என்று ஆலோசனை கூறினார். அதன்படியே நான் அந்த தொகைகளை என்னுடைய கணக்கில் வரவு வைத்துக் கொண்டேன்"" என்று விளக்கம் அளித்தார் ஜெயலலிதா. 

வெளிநாட்டில் இருந்து பணம் பெறுவது தொடர்பாக அன்னிய செலாவணி தடுப்புச் சட்டம் சில நிபந்தனைகளை விதிக்கிறது. அதன்படி பெறப்பட்ட தொகைகள் அல்ல இவை. ஆகவே அன்னிய செலாவணி குற்றத் தடுப்பு சட்ட பிரிவுகளின்கீழ் ஜெயலலிதா மீது சி.பி.ஐ. வழக்கு கொடுத்தது. எனினும் பணம் எங்கிருந்து வந்தது என்று ஆய்வு நடத்தியபோது நியுயார்க்கில் உள்ள பாஸ்கத் டிரஸ்ட் கம்பெனி இதற்கான பண விடையை அனுப்பி வைத்துள்ளது என்பது தெளிவாகியது. ஜெயலலிதா ஒரு அரசாங்க ஊழியர் (முதலமைச்சர்) என்பதால் வெளிநாட்டில் இருந்து வரும் தொகைகளை பெறமுடியாது. எனினும் ஜெயலலிதா அதுபற்றி கண்டு கொள்ளாமல் வழக்கை நடத்த முடியாமல் எத்தனை காலம் இழுத்தடிக்க முடியுமோ அத்தனை காலமாக அதாவது 10 ஆண்டு காலத்துக்கும் மேலாக இழுத் தடித்து வருகிறார். சி.பி.ஐ.-யின் இந்த வழக்கு அவர் மீது தொடரப்பட்ட பின்னரும் அவர் (1991 - 96, 2001 - 2006) இருமுறை முதலமைச்சர் பதவியை வகித்திருக்கிறார். உங்கள் மீது வழக்குகள் இருக்கின்றனவே குற்றவாளியாக நீங்கள் பதவியில் நீடிக்க லாமா?’ என்ற கேள்வி எழுந்தபோதெல்லாம் குற்றம் சாட்டப் பட்டதாலேயே ஒருவரைக் குற்றவாளி என்று கூறிவிட முடியாது. நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வரும் வரையில் நான் குற்றவாளி அல்ல. குற்றஞ்சாட்டப் பட்டவள்தான்’ - என்று வியாக்கியானம் சொல்லிக் கொண்டிருந்தார் ஜெயலலிதா. ஆனால் இப்போதோ ராசாவிற்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பிவிட்டது. ஆகவே அவரை கைது செய்ய வேண்டும் என்று கூக்குரலிடுகிறார் அவர். 

ஜெயலலிதா மீது மட்டும்தானா? அவரது ஆருயிர் தோழியும் பினாமியுமான சசிகலா-வுக்கும் துபாயில் உள்ள பேங்க் ஆப் பரோடா மூலம் 2 லட்சம் அமெரிக்க டாலருக்கான பணவிடை (எண். 085346) வந்தது. இதற்கான இந்தியப் பணம் 51 இலட்சத்து 47 ஆயிரத்து 955-யை சசிகலா தன் வங்கிக் கணக்கில் போட்டுக்கொண்டார். இங்கிலாந்தில் உள்ள இண்டர் போல் போலீஸ் மூலம் சி.பி.ஐ. இந்த வழக்கிலும் விசாரணையை மேற்கொண்டது. ம்ம்ம் இந்த இலட்சணத்தில்தான் ஜெயலலிதா ராசாவை கைது செய்யவேண்டும் என்கிறார். 10 ஆண்டு காலத்துக்கு மேலாக சி.பி.ஐ.யின் வழக்கிலேயே சிக்கிக்கொண்டு தள்ளாடும் ஜெயலலிதா, சி.பி.ஐ. நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது என்பதற்காகவே ராசாவை கைது செய்ய வேண்டும் என்பது விந்தையிலும் விந்தை

Wednesday, 1 December 2010

‘ஸ்பெக்ட்ரம்’ விசாரணையும் பார்ப்பன ஊடகங்களின் விஷமப் பிரச்சாரங்களும் நீதிபதிகளின் வருத்தமும்!

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடை பெற்று வருகிறது. இந்த வழக்கு டெல்லியில் உள்ள தன்னார் வத் தொண்டு நிறுவனம் ஒன்றினால் தொடரப் பட்ட வழக்கு. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்ன வென்றால்;
1) இந்த வழக்கின் குற்றவாளிகள் என்று யார் பெயரையும் சுட்டிக் காட்டவில்லை.
 2) இன்னார்தான் குற்றமிழைத்தவர் என்று கூறி - அவரை விசாரித்துத் தண்டிக்க வேண் டும் என்று வழக்குப் போட்ட மனுதாரர்கள் குறிப்பிட்டுக்காட்டவேயில்லை.
 3) ஸ்பெக்ட்ரம் விநியோகத்தில் முறைகேடுகள் - ஒழுங்கீனங்கள் நடந்திருக்கின்றன. அதற்குக் காரணமானவர்கள் யார் என்று விசாரித்து - அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்திரவிடவேண்டும். -   என்பதுதான் மனுதாரர்களின் கோரிக்கை ; வழக்கு.

 இந்த வழக்கை நீதிபதிகள் ஏ.கே.கங்கூலி, ஜி.எஸ்.சிங்வி ஆகியோர் விசாரித்து வருகிறார் கள். இந்த வழக்கோடு - மத்திய அமைச்சராக இருந்த ஆ.ராசா மீது ஸ்பெக்ட்ரம் தொடர்பாக வழக்குத் தொடர அனுமதி தருமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடவேண்டும் என்று சுப்பிர மணியசுவாமி தொடுத்த வழக்கும் விசாரிக்கப் பட்டு வருகிறது. ""ராசா மீது வழக்குத் தொடர அனுமதி தரவேண்டும் என்று கோரி பிரதமருக்கு நான் கடிதம் எழுதினேன். அதற்கு 16 மாதங்கள் கழித்து கால தாமதமாக பிரதமர் அலுவலகத் திலிருந்து எனக்குக் கடிதம் வந்தது"" - என்பது சுப்பிரமணிய சுவாமியின் குற்றச்சாட்டு. இந்த வழக்குகளின் விசாரணையின்போது (17.10.2010) மத்திய அரசின் சார்பில் வழக்கில் ஆஜர் ஆன வழக்கறிஞர் - இந்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலான கோபால் சுப்பிர மணியத்தைப் பார்த்து நீதிபதிகள் சில கேள்விகளை எழுப்பினார்கள்.
அது பற்றிய சுருக்கமான தகவல் வருமாறு:-
 இந்தப் புகார் தொடர்பான வழக்கு விசாரணையில் சி.பி.ஐ. மெத்தனமாகச் செயல்பட்டு வருவதாக, நீதிபதிகள் ஏற்கனவே குற்றம்சாட்டி இருந்தனர். இந்த நிலையில், 16ந் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, வழக்கு தொடர்ந்த நிறுவனத்தின் வக்கீல் பிரசாந்த் பூஷன் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக வெளியான மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கை சுட்டிக் காட்டப்பட்டு இருந்தது. பின்னர் வழக்கு விசாரணை செவ்வாய்க் கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 16-ந் தேதி விசாரணையின்போது, ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்து மத்திய மந்திரி ஆ.ராசா மீது வழக்குத் தொடருவதற்கு அனுமதி கேட்டு, முன்னாள் மத்திய சட்ட மத்திரியும், ஜனதா கட்சித் தலைவருமான சுப்பிரமணியசாமியின் கோரிக்கை மீது முடிவு எடுப்பதில் பிரதமர் மன்மோகன் சிங் நீண்ட காலம் தாமதம் செய்தது ஏன்? என்ற கேள்வி யை மத்திய அரசின் வக்கீல் (சொலிசிட்டர் ஜெனரல்) கோபால் சுப்பிரமணியத்திடம் நீதி பதிகள் எழுப்பினார்கள்.

அதுகுறித்து நீதிபதிகள் கூறியதாவது:- ‘வழக்குத் தொடருவதற்கு சுப்பிரமணிய சாமிக்கு அனுமதி அளிக்க வேண்டிய உரிய அதிகார மையம் (இந்த வழக்கில் பிரதமர்) அந்தக் கோரிக்கையை பரிசீலிக்காமல் கிடப் பில் போட்டதா? நியாயமான ஒரு அரசுக்கு இதற்கு 3 மாத அவகாசம் போதும் என்ற உச்சநீதி மன்ற விதிமுறை தெளிவாக உள்ளது. இதுகுறித்து அவர் அட்டர்னி ஜெனரலிடம் கேட்டு தெரிந்து கொண்டு இருக்கலாம். ஆனால், தற்போது ஏறத்தாழ 16 மாதங்கள் ஆகிவிட்டன. 2008ஆம் ஆண்டு நவம்பர் 29-ந் தேதி அன்று சுப்பிரமணியசாமி கொடுத்த புகாரின்பேரில், 2009ஆம் ஆண்டு அக் டோபர் 21-ந் தேதி அன்று, பெயர் குறிப்பிடாத நபர்களின் பெயரில் சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்கிறது’ - என்பதாகும். பொதுவாக வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள் இருதரப்பு வக்கீல்களிடமும் பல் வேறு சந்தேகங்களை எழுப்புவதுண்டு. சில சமயங்களில் நீதிபதிகளின் குரலில் கோபமும் கொப்பளிப்பதுண்டு. ஆனால் அப்படி அவர்கள் விசாரணையின் போது கேட்கும் கேள்விகள் - அல்லது விமர் சனங்கள் ஒருபோதும் அவர்களது இறுதித் தீர்ப்பில் இடம் பெறுவதில்லை. அந்த வார்த்தைகள் சொற்பிரயோகங்கள் எல்லாம்
தீர்ப்புகள் அல்ல; Observations மட்டுமே.
                                                                          ***
 ஆனால் ஸ்பெக்ட்ரம் வழக்கின்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறிய இரண்டு வாக்கி யங்களை நமது பார்ப்பன ஏடுகளும், ஊடகங்களும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டன.
1) ராசாவை பதவி விலக்கக்கோரி சுப்பிரமணியசாமி எழுதிய கடிதத்திற்கு பதிலளிக்க பிரதமருக்கு இத்தனை காலம் பிடித்தது ஏன்? இந்த விஷயத்தில் ஏன் இவ்வளவு கால தாமதம்?
2) குற்றச்சாட்டுக்கு ஆளான ராசா இன்ன மும் பதவியில் நீடிக்கிறாரே எப்படி? - என்பதே அந்தக் கேள்விகள்.
 இதனை கையில் எடுத்துக் கொண்டு பார்ப்பன ஏடுகளும் ஊடகங்களும் எதிர்க் கட்சி களும் ""பிரதமருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்"" ""பிரதமரின் மெத்தனப் போக்கு; நீதிபதிகள் வருத்தம்"" ""செயல்படாத பிரதமர்"" என்று அவை ஊளையிட, ""பிரதமர் பதவி விலகவேண்டும்"" ""பிரதமர் மவுனம் காப்பது ஏன்?"" ""ஊழலுக்கு பிரதமர் மறைமுக ஆதரவா?"" ""ராசாவை உடனடியாகப் பதவி விலக்க வேண்டும்"" என்று எதிர்க்கட்சிகள் அறிக்கை மேல் அறிக்கை விட்டு புழுதி கிளப்பியது மல்லாமல் ராசாவை விலக்கும் கோரிக்கையில் வெற்றியும் பெற்றன. இப்போது அந்தப் புளுகுணிக் கூட்டங்கள் ‘‘பாராளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் குழு அமைக் கும் வரை பாராளுமன்றத்தை நடத்தவிடமாட்டோம்"" என்று அழுகுணி ஆட்டம் போடு கின்றன.
இன்று ஸ்பெக்ட்ரம் பேரால் காட்டுக்கூச்சல் கிளப்பி ஆட்டம் போடும், இந்த மாதிரி ஏடுகளும் இந்த மாதிரி ஊடகங்களும் எதிர்க்கட்சிகளும் தங்களது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள எப்படிப்பட்ட விபரீத வழிகளில் எல்லாம் பயணிப்பார்கள் என்பதை ஒரு தேர்தல் முடிவுக்குப் பின்னர் வெளிவந்த ‘இந்து’ நாளிதழ் தலையங்கம் எழுதி கண்டித்தது.
அந்தத் தலையங்கத்தின் தலைப்பு Paid News என்பதாக நினைவு.
 மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்த தேர்தலின் முடிவுகள் வெளிவந்தபோது எழுதப்பட்ட தலையங்கம் அது.  அதிலே - விளம்பரக் கட்டணத்தை வாங்கிக்கொண்டு விளம்பரத்திற்கு பதிலாக டடட கட்சி அமோக வெற்றி பெறும். டடட இந்தக் கட்சியே ஆட்சியைக் கைப்பற்றும். பெருகி வருகிறது என்று செய்தி விமர்சனக் கட்டுரைகளை வெளியிட்டு மக்களைக் குழப்புகிறார்கள் - திசை திருப்புகிறார்கள். - என்பதை இரு மராட்டிய ஏடுகளை சுட்டிக்காட்டி ஆதாரத்தோடு நிரூபித்திருந்தது ‘இந்து’ ஏடு!
 இன்று ஸ்பெக்ட்ரம் விஷயத்திலும் அதே விஷமத்தை - அதே யோக்கி யத்தன்மை அற்ற போக்கை அயோக்கியத் தனத்தைத்தான் செய்து வருகின்றன.
1) பணம் கொடுத்து பொய்ச் செய்தி போடவைக்கும் அரசியல் கட்சிகள்,
 2) பணம் வாங்கிக்கொண்டு பொய்ச் செய்தி வெளியிடும் ஏடுகள் இன்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில்தான் பார்ப்பனர்களின் கைக் கருவிகளாகி விட்ட சில பத்திரிகைகள் - ஊடகங்கள் உச்சநீதிமன்ற வழக்கையே - தங்களது சூது எண்ணங்கள் விபரீத சதித் திட்டங்கள் ஆகியவற்றை நிறைவேற்றிக் கொள்ள ஆயுதங்களாகப் பயன்படுத்துகின்ற னர் என்பதை எல்லோரும் புரிந்துகொண்டு வருகிறார்கள் என்பதோடு, உச்சநீதிமன்ற நீதிபதிகளே இத்தகைய ஏடுகளின் நடத்தை குறித்து வருத்தமடைந்திருக்கிறார்கள் என்பதை இன்றைய (23.11.2010) ‘தினமணி’ ஏட்டில் வெளிவந்திருக்கிற செய்தி எடுத்துக் காட்டுவதாக இருக்கிறது.
 அது வருமாறு :- ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையில் ஊடகங்கள் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிடுவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.  இது தொடர்பான வழக்கை திங்கள்கிழமை விசாரித்த நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.கே. கங்குலி, இந்த வழக்கில் பிரதமரின் பெயரை ஊடகங்கள் தேவையில்லாமல் பெரிது படுத்துவதாகவும் அதிருப்தி தெரிவித்தனர். பத்திரிகை சுதந்திரத்தை நீதிமன்றம் மதிக்கிறது. சமுதாயத்துக்கு சேவையாற்று வதில் பத்திரிகை, மின்னணு ஊடகங்கள் பெரும் பங்கு வகிப்பதை யாரும் மறுக்க முடியாது. எனினும், நீதிமன்ற நடவடிக்கைகளில் தவறான தகவல்கள் வெளியாவது வருத்தமளிக் கிறது. ஸ்பெக்ட்ரம் வழக்கில் பத்திரிகை, மின்னணு ஊடகங்கள் தவறான தகவல் களை வெளி யிட்டு வருகின்றன. பிரதமர் மன் மோகன் சிங்கின் பெயரை பெரிதுபடுத்தி செய்திகள் வெளியாகி வருகின்றன. சில பத்திரிகைகளில் ‘அரசை அறைந்தது உச்சநீதிமன்றம்’ என்ற தலைப்பில் செய்தி பிரசுரமாகி உள்ளது. ‘அறைந்தது’ என்பதற்கு என்ன அர்த்தம் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். சி.பி.ஐ. தரப்பில் வழக்கறிஞர் கே.வேணு கோபாலும், முன்னாள் அமைச்சர் ஆ.ராசா சார்பில் ஏ.ஆர்.அந்தியார்ஜுனாவும் ஆஜராகினர். சி.பி.ஐ. வழக்கறிஞர் வேணுகோபால் கூறும் போது, எதிர்த்தரப்பு வழக்கறிஞர்கள் செய்தி யாளர்களுக்கு தவறான தகவல்களை அளிப்பதாக குற்றஞ்சாட்டினார். நீதிமன்றத்துக்குப் போட்டியாக ஊடகங்கள் வழக்கு விசாரணையை நடத்துவதால் குற்றம் சுமத்தப்பட்டவருக்கு பாதிப்பு ஏற்படுவதாக வழக்கறிஞர் அந்தியார்ஜுனா கூறினார். இதற்குப் பதிலளித்த நீதிபதி சிங்வி, இந்த வழக்கில் யார் மீதும் குற்றம் சாட்டப்படவில்லை என்றார். - என்பதே அந்தச் செய்தி!
                                                                                ***
 ஆட்டைக்கடித்து, மாட்டைக்கடித்து, தோலைக்கடித்து அப்புறம் வேறு எதையோ கடிக்க முயலும் இந்த அசிங்கமான, அநாகரீகமான போக்கை இனியாவது கைவிட்டு - ஜன நாயக நெறிப்படி - கருத்து சுதந்திரத்தை - பத்திரிகை தர்மத்தை அரசியல் நேர்மை தூய்மை ஆகியவற்றைப் பேணிக்காக்க முன்வரு வார்கள் என்றும் அதற்கு நீதிபதிகளின் வருத்தம் தோய்ந்த விமர்சனம் உறுதுணையாக இருக்கும் என்றும் நம்புவோமாக!
                                              - சின்னகுத்தூசி
                                          நன்றி:முரசொலி(24-11-2010)